சமூக இடைவெளியை பின்பற்றுவதில் முன்னேற்றம் தேவை கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்

புதுச்சேரியில் சமூக இடைவெளியை பின்பற்றுவதில் இன்னும் முன்னேற்றம் தேவை என்று கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.
சமூக இடைவெளியை பின்பற்றுவதில் முன்னேற்றம் தேவை கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்
Published on

புதுச்சேரி,

புதுவையில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. காவல் மற்றும் உள்ளாட்சித்துறை வழிமுறைகளை பின்பற்றாதவர்கள், முக கவசம் அணியாதவர்கள், பொது இடங்களில் எச்சில் உமிழ்பவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

அதன்படி நேற்று முக கவசம் அணியாத 3,254 பேருக்கும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 1,373 பேருக்கும், எச்சில் துப்பியதாக 48 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த விவரத்தை கவர்னர் கிரண்பெடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். சில இடங்களில் நடவடிக்கை மிக மோசமாக இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

முன்னேற்றம் தேவை

இந்த பதிவில் கவர்னர் கிரண்பெடி கூறியிருப்பதாவது:-

காவல் மற்றும் உள்ளாட்சி துறையில் கொடுத்த விவரங்கள் வந்துள்ளது. நகராட்சி மற்றும் பஞ்சாயத்துகளில் விதிமுறைகளை அமல்படுத்துவதோடு இன்னும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றுவதை அமல்படுத்துவதில் இன்னும் முன்னேற்றம் தேவை. சமூக இடை வெளியை பின்பற்றுவது, முக கவசம் அணிவது ஆகியவற்றில் மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com