தொட்டியம் அருகே மகளுடன் வாழ மறுத்த மருமகன் வெட்டிக்கொலை மாமனார் கைது

தொட்டியம் அருகே மகளுடன் சேர்ந்து வாழ மறுத்த மருமகனை வெட்டிக்கொலை செய்த மாமனாரை போலீசார் கைது செய்தனர்.
தொட்டியம் அருகே மகளுடன் வாழ மறுத்த மருமகன் வெட்டிக்கொலை மாமனார் கைது
Published on

தொட்டியம்,

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள சீலைப்பிள்ளையார்புத்தூரை சேர்ந்தவர் மாணிக்கம் என்கிற பிச்சாண்டி(வயது 35). இவர் ஆறு, குளங்களில் மீன் பிடித்து விற்பனை செய்து வந்தார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த வனிதா(22) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் பிச்சாண்டிக்கும், வனிதாவிற்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக கணவரிடம் கோபித்துக்கொண்டு அருகில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று அங்கு குழந்தையுடன் வனிதா வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை அங்குள்ள பிள்ளையார் கோவில் அருகே சென்று கொண்டிருந்த பிச்சாண்டியை அவரது மாமனார் மாணிக்கம் வழிமறித்து, என் மகளுடன் ஏன் சேர்ந்து வாழ மறுக்கிறாய் என கேட்டார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. அப்போது பிச்சாண்டியை, மாணிக்கம் அரிவாளால் வெட்டினார். இதில் தலையின் பின்பகுதியில் பலத்த காயம் அடைந்த பிச்சாண்டி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காட்டுப்புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிச்சாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மருமகனை வெட்டி கொன்ற மாமனார் மாணிக்கத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com