ஆயுதப்படை போலீஸ், நர்சுகள் உள்பட 140 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,903 ஆக உயர்வு

வேலூர் ஆயுதப்படை போலீஸ், நர்சுகள் உள்பட 140 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,903 ஆக உயர்ந்துள்ளது.
ஆயுதப்படை போலீஸ், நர்சுகள் உள்பட 140 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,903 ஆக உயர்வு
Published on

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டாலும் தினமும் 100-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் நேற்று 140 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். வேலூர் மாநகராட்சி பகுதியில் மட்டும் 65 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

வேலூர் ஆயுதப்படை குடியிருப்பு வளாகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது. இதில், ஆயுதப்படையில் பணிபுரிந்த ஆண், பெண் போலீசார் 120 பேருக்கு சளிமாதிரி சேகரிக்கப்பட்டன. சிலரின் பரிசோதனை முடிவுகள் நேற்று வந்தன. அதில், ஆயுதப்படை குடியிருப்பில் தங்கி பணிபுரியும் போலீஸ் ஒருவருக்கு தொற்று உறுதியானது. அதைத்தொடர்ந்து அவர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவருடன் தங்கியிருந்த காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் பணிபுரியும் நர்சுகள், ஊழியர்களுக்கு சளி, இருமல் உள்ளிட்ட கொரோனா அறிகுறி காணப்பட்டன. அதைத்தொடர்ந்து அவர்களின் சளிமாதிரி சேகரிக்கப்பட்டன. அதன் பரிசோதனை முடிவுகள் நேற்று வந்தது.

அதில், நர்சுகள் ஊழியர்கள் உள்பட 6 பேருக்கு தொற்று உறுதியானது. அதையடுத்து அவர்கள் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். நர்சுகள், ஊழியர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் நெருங்கி பழகிய அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சளிமாதிரி சேகரிக்கப்பட உள்ளன.

140 பேருக்கு கொரோனா

அதைத்தவிர சத்துவாச்சாரியில் 8 வயது சிறுவன் உள்பட 5 பேர், சலவன்பேட்டையில் 80 வயது முதியவர், சைதாப்பேட்டையில் 80 வயது மூதாட்டி, கொரோனா தொற்று பாதித்த நபர்களின் உறவினர்கள், குடும்பத்தினர் 22 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் 140 பேருக்கு ஒரேநாளில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 4,763 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த 140 பேர் மூலம் 4,903 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com