

ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே உள்ள கழுகூரணி பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரது மனைவி ராக்கம்மாள்(வயது 34). இவர் ராமநாதபுரம் அருகே உள்ள போக்குவரத்து நகர் பகுதியில் தோப்பு ஒன்றில் தங்கியிருந்து பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றார். இவர் வளர்த்து வந்த ஆடு ஒன்று தோப்பு பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து விட்டது.
ஆட்டினை மீட்பதற்காக அந்த பகுதியை சேர்ந்த ஆண்டி(70) என்பவரை அழைத்து வந்தனர். கிணற்றுக்குள் விழுந்த ஆட்டை மீட்க அவர் முயன்றபோது விஷவாயு தாக்கியது. இதில் ஆண்டி பரிதாபமாக உயிரிழந்தார். ஆடும் விஷவாயு தாக்கி இறந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த ராமநாதபுரம் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று இறந்து கிடந்த ஆண்டியின் உடலையும், ஆட்டினையும் மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலை அரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.