விபத்தில் இறந்த நபரின் குடும்பத்தினருக்கு உரிய நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கு உரிய நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்திசெய்யப்பட்டது.
விபத்தில் இறந்த நபரின் குடும்பத்தினருக்கு உரிய நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
Published on

செங்கல்பட்டு,

காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி லட்சுமி. இவர்களது மகன் ஸ்ரீதரன் (வயது 23). இவர் கடந்த 15.4.2013 அன்று தனது திருமண அழைப்பிதழை உறவினர்களுக்கு கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். குன்னத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ் மோதியதில் ஸ்ரீதரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட உரிமையியல் கோர்ட்டில் சாலை விபத்து நஷ்ட ஈடு கோரி ஸ்ரீதரனின் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர். கடந்த 2013-ம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், ஸ்ரீதரனின் குடும்பத்துக்கு மாவட்ட உரிமையியல் கோர்ட்டு நீதிபதி ரூ.15 லட்சத்து 75 ஆயிரம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதில் அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாகத்தினர் மட்டும் உரிய தொகையை வழங்காமல் இருந்துள்ளனர். இதனை சுட்டிக்காட்டி மீண்டும் கடந்த 05.04.2018 அன்று மேல்முறையீடு செய்யப்பட்டது.

அந்த மனுவை விசாரணை செய்த மாவட்ட உரிமையியல் கோர்ட்டு நீதிபதி கடந்த 2017-ம் ஆண்டு முதல் அசல் தொகை, வட்டித் தொகை மற்றும் கோர்ட்டு கட்டண தொகை செலவுகள் உள்பட ரூ.22 லட்சத்து 19 ஆயிரத்து 762-ஐ உடனடியாக அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் இந்த தொகையையும் அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாகத்தினர் அளிக்காததால் மதுராந்தகத்தில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற அரசு விரைவு பஸ்சை செங்கல்பட்டு புதிய பஸ் நிலையத்தில் கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்து, செங்கல்பட்டு கோர்ட்டு வளாகத்துக்கு கொண்டு சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com