

கொள்ளிடம்,
பதிவுறு எழுத்தர்களுக்கு இணையாக ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று ஊராட்சி செயலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இது தொடர்பான கோரிக்கை மனுவை முதல்-அமைச்சருக்கு அனுப்பும் போராட்டம் நடைபெறும் என ஊரக வளர்ச்சித்துறை ஊழியர் சங்கங்கள் அறிவித்து இருந்தன.
அதன்படி நாகை மாவட்டம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோரிக்கை மனு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி செயலாளர்களுக்கு, பதிவுறு எழுத்தர்களுக்கு இணையாக ஊதியத்தை உயர்த்தி வழங்குவதற்கான அரசாணையை உடனடியாக வெளியிட வலியுறுத்தி முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், நிதித்துறை செயலாளர், ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் ஆகியோருக்கு ஒன்றிய ஆணையர் அன்பரசு, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) தமிழ்கொடி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில செயலாளர் சவுந்தரராஜன் உள்ளிட்டோர் ரத்த கையெழுத்திட்ட கோரிக்கை மனுவை அனுப்பினர்.