குமரி மாவட்டத்தில் வருகிற 28-ந் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்

குமரி மாவட்டத்தில் வருகிற 28-ந் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற இருக்கிறது. இதன் மூலம் 1½ லட்சம் குழந்தைகள் பயன் அடைவார்கள் என்று கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தெரிவித்தார்.
குமரி மாவட்டத்தில் வருகிற 28-ந் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்
Published on

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தலைமை தாங்கி பேசியபோது கூறியதாவது:-

போலியோவை முற்றிலுமாக ஒழிக்க 1995-ம் ஆண்டு முதல் ஆண்டிற்கு 2 முறை சிறப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான முதற்கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் நாடு முழுவதும் வருகிற 28-ந் தேதியும், 2-ம் கட்ட முகாம் மார்ச் 11-ந் தேதியும் நடைபெற உள்ளது.

குமரி மாவட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவமனைகள், நகர்புற மற்றும் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், நகராட்சி மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 1,236 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட உள்ளன. முதற்கட்ட முகாமில் 1,52,400 குழந்தைகள் பயன்பெற உள்ளனர்.

முகாம்களில் 5,024 பணியாளர்கள் (பொது சுகாதாரம், ஊட்டச்சத்து, சத்துணவு, நகராட்சி மற்றும் தன்னார்வலர்கள்) பணியில் இருப்பார்கள். இது தவிர முகாம் நடைபெறும் இடங்களுக்கு குளிர்பதன முறையில் சொட்டு மருந்து கொண்டு செல்ல 233 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவையான சொட்டு மருந்து மாவட்ட துணை இயக்குநர், சுகாதாரப்பணிகள் அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகராட்சியின் உரிய குளிர்பதன முறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

மக்கள் அதிகமாக கூடும் இடங்களான ரெயில் மற்றும் பஸ் நிலையங்கள், பூம்புகார் படகுத்துறை மற்றும் காந்திமண்டபம் ஆகிய இடங்களில் 17 முகாம்களும், பஸ் வசதி இல்லாத மலைப்பகுதிகளில் 8 நடமாடும் குழுக்களும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. தோட்டமலை மற்றும் தச்சமலை பகுதிகளுக்கு படகுகளில் சென்று சொட்டு மருந்து வழங்கப்படும். முகாம் ஆய்வு பணிகளுக்கு 160 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் அவர்களுடைய பெற்றோர் போலியோ சொட்டு மருந்து கொடுத்து பயன் அடையலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com