

உடையார்பாளையம்:
மாசடைந்தது
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே கழுமங்கலம் ஊராட்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் மையப்பகுதியில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் கார்க்குட்டை ஏரி, பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த ஏரியை பொதுமக்கள் குளிப்பதற்கும், கால்நடைகளுக்கு குடிநீராகவும், விவசாய பாசனத்திற்கும் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் கார்க்குட்டை ஏரியானது கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதன் காரணமாக இந்த ஏரியானது மாசடைந்தது. மேலும் ஏரி முழுவதும் கோரைப் புற்கள் மற்றும் தாமரைச்செடிகள் வளர்ந்து ஆக்கிரமித்து விட்டன.
தூர்வார வேண்டும்
இதன் காரணமாக ஏரி சுகாதார தன்மைய இழந்து முற்றிலும் மாசடைந்து பொதுமக்கள் குளிப்பதற்கும், கால்நடைகளுக்கு குடிநீர் பயன்படுத்துவதற்கும் லாயக்கற்ற நிலையில் இருந்து வருகிறது. வேறுவழியின்றி இந்த ஏரியில் குளிக்கும் பொதுமக்களுக்கு உடல் அரிப்பு, காய்ச்சல் போன்ற உபாதைகள் ஏற்பட்டு, அவதிப்படுகின்றனர். மேலும் ஏரியில் நீர் அருந்தும் கால்நடைகள் புதர்செடிகளில் சிக்கி உயிர் இழக்கும் அபாயமும் உள்ளது.
இந்த ஏரியை தூர்வார வேண்டும் என்று பலமுறை அதிகாரிகளிடத்தில் தெரிவித்தும், இதுவரை இந்த ஏரியை தூர்வார எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு கார்க்குட்டை ஏரியை தூர்வார மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.