சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொரோனா பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்ட கைதி தப்பி ஓட்டம்

கைதி தப்பி ஓட்டம்
சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொரோனா பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்ட கைதி தப்பி ஓட்டம்
Published on

சேலம்:

சேலம் 5 ரோட்டில் செயல்பட்டு வரும் தனியார் ஓட்டலுக்கு சொந்தமான குடோன் 3 ரோட்டில் உள்ளது. அங்கு பழைய இரும்பு பொருட்கள், டேபிள், சேர் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, குடோனின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் அங்கிருந்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை திருடி சென்றனர். இது குறித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், களரம்பட்டியை சேர்ந்த வேல்முருகன், திருவாக்கவுண்டனூரை சேர்ந்த மணி, ஜெகன், மெய்யனூர் அர்ஜுனன், ரெட்டியூர் ஏரிக்கரையை சேர்ந்த தமிழரசன் ஆகியோர் என்பதும், இவர்கள் 3 ரோட்டில் உள்ள குடோனில் இருந்து பொருட்களை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் கைது செய்த போலீசார் அவாகளிடம் இருந்து இரும்பு பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்தனர். இதற்காக கொரோனா பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு 5 பேரையும் போலீசார் அழைத்து சென்றனர். அப்போது, அங்கிருந்து தமிழரசன் (30) என்பவர் போலீசாரை ஏமாற்றிவிட்டு தப்பித்து ஓட்டம் பிடித்தார். இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com