வனத்துறை அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் சாலையை சீரமைக்க தடையாக இருப்பதாக குற்றச்சாட்டு

தடிக்காரன்கோணம் அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க வனத்துறை அதிகாரிகள் தடையாக இருப்பதாக கூறி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வனத்துறை அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் சாலையை சீரமைக்க தடையாக இருப்பதாக குற்றச்சாட்டு
Published on

அழகியபாண்டியபுரம்,

தடிக்காரன்கோணம் அருகே பால்குளத்தில் இருந்து கரும்பாறைக்கு ஒரு சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவமாணவிகள் வாகனங்களிலும், கால்நடையாகவும் பயணம் செய்கிறார்கள். கடந்த சில நாட்களாக இந்த சாலை சேதமடைந்து, ஜல்லிகள் பெயர்ந்து போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது. இதனால், அந்த பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்த சாலையை சீரமைக்க தேவையான ஜல்லி போன்ற பொருட்கள் தடிக்காரன்கோணத்தில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான சோதனை சாவடி வழியாக கொண்டு செல்லவேண்டும். சோதனை சாவடியில் பணியில் இருக்கும் அதிகாரிகள் சாலையை சீரமைக்க தேவையான பொருட்களை கொண்டு செல்ல விடாமல் தடுத்து வருகிறார்கள். இதனால், சாலை பணி தொடர்ந்து முடக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், நேற்று பால்குளம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஏராளமான பொதுமக்கள் சேதமடைந்த சாலையில் கூடினர். அவர்கள் வனத்துறை அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சாலையை சீரமைக்க வனத்துறை அதிகாரிகள் தடையாக இருப்பதாக கோஷமிட்டனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com