குளத்தில் மண் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் பணிகள் பாதியில் நிறுத்தம்

திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கத்தில் அதிகமாக குளத்தில் மண் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது.
குளத்தில் மண் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் பணிகள் பாதியில் நிறுத்தம்
Published on

திருவாரூர்,

திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கத்தில் முத்தரப்பு குளம் உள்ளது. இந்த குளத்தை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 6 மாதம் முன்பு அரசு அனுமதியுடன் இந்த குளம் தூர்வாரப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த குளத்தில் மீண்டும் மண் எடுப்பதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பொக்லின் எந்திரத்தின் உதவியுடன் கடந்த சில நாட்களாக டிராக்டர் மூலம் மண் எடுக்கப்பட்டு வந்தது.

இந்த குளத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக மண் வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் குளம் மிகவும் ஆழமாவதால் அனைவரும் குளத்தை பயன்படுத்த முடியாது. மேலும் கரைகள் பலவீனம் அடைவதால், இந்த வழியாக செல்லும் சாலை, குடியிருப்புகள் பாதிக்கப்படும் என குற்றம் சாட்டி அப்பகுதி மக்கள் நேற்று மண் எடுக்கும் பணியினை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது கரை பகுதிகளை பலப்படுத்த வேண்டும். மண் எடுக்கும் பணிகளை உடனே நிறுத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து பொக்லின் எந்திரத்தின் உதவியுடன் கரைகள் பலப்படுத்தப்பட்டு மண் எடுக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் அந்தபகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com