மின்சார வசதி செய்துதரக்கோரி அடித்துக் கொன்ற 2 விஷ பாம்புடன் ஊர்வலமாக வந்த பொதுமக்கள்

வந்தவாசி தாலுகா தெள்ளார் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கீழ்புத்தூர் கிராமத்தில் இருளர் குடியிருப்புகள் உள்ளன. இவர்கள் அனைவருமே கூலித்தொழில் செய்துதான் பிழைத்து வருகின்றனர்.
மின்சார வசதி செய்துதரக்கோரி அடித்துக் கொன்ற 2 விஷ பாம்புடன் ஊர்வலமாக வந்த பொதுமக்கள்
Published on

வந்தவாசி,

வந்தவாசி அருகே வீட்டுக்குள் புகுந்த 2 கட்டுவிரியன் பாம்பை அடித்துக் கொன்ற தொழிலாளி அதனை எடுத்துக்கொண்டு பொதுமக்களுடன் வந்தவாசி தாலுகா அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வந்தவாசி தாலுகா தெள்ளார் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கீழ்புத்தூர் கிராமத்தில் இருளர் குடியிருப்புகள் உள்ளன. இவர்கள் அனைவருமே கூலித்தொழில் செய்துதான் பிழைத்து வருகின்றனர். இந்த குடியிருப்புகளில் வசிக்கும் 15 குடும்பத்தினருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பட்டா வழங்கப்பட்டது. ஆனால் எந்தவித அடிப்படை வசதிகளையும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகமோ அல்லது அரசு நிர்வாகமோ ஏற்படுத்தி தரவில்லை. குறிப்பாக இவர்கள் குடியிருப்புகளுக்கு மின்வசதியே இல்லை.

அனைத்தையும் இவர்கள் சமாளித்து வந்த நிலையில் அடிக்கடி வீடுகளுக்குள் பாம்புகள் புகுந்து வந்தன. இதனால் நிம்மதியின்றியே அவர்கள் வாழ்க்கையை நடத்தினர். இந்த நிலையில் நேற்று பச்சையப்பன் என்பவர் தனது வீட்டில் மனைவி வள்ளி, மகள்கள் செல்வி, சத்யாவுடன் தூங்கிக்கொண்டிருந்தார்.

நள்ளிரவு அவரது வீட்டுக்குள் 2 கட்டுவிரியன் பாம்புகள் வந்தன. அவற்றில் ஒரு பாம்பு தூங்கிக்கொண்டிருந்த பச்சையப்பன் மீது ஏறியவாறு சென்றது. ஏதோ ஊர்ந்து செல்வதை உணர்ந்த பச்சையப்பன் எழுந்து சிமினி விளக்கை ஏற்றினார். அப்போது 2 கட்டுவிரியன் பாம்பு இருந்ததை கண்டு அலறி அடித்துக்கொண்டு வெளியில் வந்தார். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் 2 பாம்பையும் அவர் அடித்துக்கொன்றார்.

இனியும் அமைதியாக இருந்தால் உயிருக்கு பாதுகாப்பு இருக்காது என்று கருதிய அவர் நேற்று தான் அடித்துக்கொன்ற 2 கட்டுவிரியன் பாம்புகளை ஒரு சாக்குப்பையில் வைத்துக்கொண்டு தனது பகுதியில் உள்ள இருளர் சமூகத்தை சேர்ந்த பொதுமக்களுடன் வந்தவாசி தாலுகா அலுவலகத்துக்கு வந்தார். அவர்களுடன் தமிழ்நாடு சிறுபான்மை நலக்குழு மாவட்ட துணை செயலாளர் யாசர்அராபத், மாவட்ட குழு உறுப்பினர் அப்துல்காதர் ஆகியோரும் வந்தனர். தாலுகா அலுவலகத்தின் நுழைவு வாயில் அருகே வந்தபோது மழை பெய்தது. ஆனால் கொட்டும் மழையிலும் அனைவரும் நனைந்தவாறு ஊர்வலமாக தாலுகா அலுவலகத்துக்குள் வந்தனர்.

தாசில்தார் முரளியை சந்தித்த அவர்கள் பச்சையப்பன் கொண்டு வந்திருந்த இறந்த 2 கட்டுவிரியன் பாம்புகளையும் எடுத்துக்காட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் தாசில்தாரிடம் மனு ஒன்றை அளித்து கூறுகையில், எங்கள் வீடுகளுக்கு மின்சார வசதி செய்து தர வேண்டும் என நாங்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கூலித்தொழில் செய்து பிழைக்கும் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை. வீடுகளுக்குள் அடிக்கடி விஷ பூச்சிகள் புகுந்து விடுகின்றன. எனவே எங்கள் வீடுகளுக்கு மின்சார வசதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

அவர்களிடம் தாசில்தார் மின்சார வசதி ஏற்படுத்துவது குறித்து மனுவை சம்பந்தப்பட்ட துறையினருக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதனை ஏற்று அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com