

காரிமங்கலம்,
பொங்கல் பரிசு தொகுப்பு
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா வேட்டி-சேலை மற்றும் விலையில்லா பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டம் கெர கோடஅள்ளி, காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு தீர்த்தகிரி நகர் ஆகிய இடங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகங்களில் விலையில்லா வேட்டி- சேலை மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
விழாவிற்கு கலெக்டர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் ராமமூர்த்தி, கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் பாண்டியன், கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ரெங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி-சேலைகள் மற்றும் பொங்கல் பரிசு பொருட்களை வழங்கினார்.
மக்கள் ஆதரவு
விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசும் போது,தமிழக முதல்-அமைச்சராக இருந்து மறைந்த ஜெயலலிதா செயல்படுத்திய அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் தமிழக அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. இதற்கு பொதுமக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 1,047 ரேஷன் கடைகளிலும் பொங்கல் பண்டிகையையொட்டி வழங்கப்படும் விலையில்லா வேட்டி- சேலைகள் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பை பொதுமக்கள் பெற்று பொங்கல் பண்டிகையை சிறப்பான முறையில் கொண்டாட வேண்டும்என்றார்.
இந்த நிகழ்ச்சிகளில் முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் டி.ஆர்.அன்பழகன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் தமிழ்ச்செல்வி குமார், கோபால், முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் சங்கர், கூட்டுறவு சங்க தலைவர்கள் சம்பத், செந்தில்குமார், கிரி, சங்க செயலாளர்கள் சோமு, துரைராஜ், குப்புசாமி, கூட்டுறவு பணியாளர் சங்க தலைவர் பழனிச்சாமி, தாசில்தார்கள் கண்ணன், அதியமான் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.