பழைய துணிகளை வழங்கியதால் ஆத்திரம்: நிவாரண பொருட்களை சாலையில் வீசி மறியல்

அதிராம்பட்டினம் அருகே பழைய துணிகளை வழங்கியதால் ஆத்திரமடைந்த மக்கள் நிவாரண பொருட்களை சாலையில் வீசி மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பழைய துணிகளை வழங்கியதால் ஆத்திரம்: நிவாரண பொருட்களை சாலையில் வீசி மறியல்
Published on

அதிராம்பட்டினம்,

கஜா புயலில் சிக்கி தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம், அதிராம்பட்டினம், மதுக்கூர், ஒரத்தநாடு பகுதியில் ஏராளமான தென்னை மரங்கள் சாய்ந்தன. மேலும் ஆயிரக்கணக்கான குடிசை வீடுகள் சேதமடைந்தன. மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் சேதம் அடைந்ததால் முடச்சிக்காடு, வீரியங்கோட்டை, உடையநாடு, ஊமத்தநாடு, குருவிக்கரம்பை, கைவனவயல், மருங்கப்பள்ளம் உள்பட பல இடங்களில் இன்னும் மின்வினியோகம் செய்யப்படவில்லை. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அதிராம்பட்டினம் அருகே உள்ள பழஞ்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட நிவாரண பொருட்கள் வருவாய்த்துறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது. நிவாரண பொருட்களை வாங்கி சென்ற பொது மக்கள் அதை பிரித்து பார்த்தனர். அப்போது அதில் பழைய சேலைகள், பழைய போர்வைகள், சட்டைகள் என உபயோகப்படுத்தப்பட்ட பொருட்கள் இருந்தன. இதனால் ஆத்திரமடைந்த 200-க்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண பொருட்களை சாலையில் தூக்கி வீசி எறிந்து நிவாரண பொருட்கள் வழங்கிய அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வேறு புதிய நிவாரண பொருட்கள் வழங்குவதாக உறுதி அளித்தனர். இதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com