

விருதுநகர்,
கலெக்டர் சிவஞானத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ராமசாமி அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
விருதுநகர் மாவட்டம் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கிராம மக்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். குறிப்பாக வத்திராயிருப்பு பகுதியில் விவசாயம் தவிர வேறு தொழில்கள் கிடையாது. எனவே இந்த பகுதி விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் வாழ்வாதாரமின்றி சிரமப்படுகின்றனர். முழுமையாக ரேஷன் கடையைத் தான் நம்பி உள்ளனர். ஆனால் இவர்களுக்கு ரேஷன் பொருட்கள் முறையாக கிடைக்கவில்லை.
வத்திராயிருப்பு கூட்டுறவு பண்டக சாலை மூலம் ரேஷன் பொருட்கள் இவர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. புழுங்கல் அரிசிக்கு பதில் பச்சைஅரிசி வழங்குகிறார்கள். மண்எண்ணெய் 35 சதவீதம் தான் வழங்கப்படுகிறது. அரிசிக்கு பதிலாக வழங்க வேண்டிய கோதுமை வழங்கப்படவில்லை. பாமாயிலும் வினியோகம் செய்யப்படவில்லை.
வறட்சி நிவாரணமாக விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரமும், விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கக் கோரி கிடைக்கவில்லை. எனவே வறட்சி பாதிப்பு அடைந்த விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் ரேஷன் பொருட்களையாவது உரிய அளவில் முறையாக வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.