சேலத்தில் மூடப்பட்டிருந்த பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட தொடங்கின

ஊரடங்கு உத்தரவால் சேலத்தில் மூடப்பட்டிருந்த பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட தொடங்கின. அங்கு பாதுகாப்பு கவச உடை அணிந்து ஊழியர்கள் பணியாற்றினர்.
சேலத்தில் மூடப்பட்டிருந்த பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட தொடங்கின
Published on

சேலம்,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்கள் மூடப்பட்டன. வீடு மற்றும் நிலங்களை கிரயம் செய்வதற்கு தினமும் ஏராளமானோர் வந்து சென்றதால் கொரோனா தொற்று ஏற்படும் சூழல் நிலவியதால் பத்திரப்பதிவு அலுவலகங்களை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 20 நாட்களுக்கு மேலாக பத்திரப்பதிவு அலுவலகங்கள் மூடப்பட்டன. இதனால் பொதுமக்கள் நிலங்களை பதிவு செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இந்தநிலையில், அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களும் வழக்கம்போல் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. சேலம் மாவட்டத்தில் 24 பத்திரப்பதிவு அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்கள் அனைத்தும் நேற்று காலை வழக்கம்போல் செயல்பட தொடங்கின. சார் பதிவாளர் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பு உடை மற்றும் முக கவசம் அணிந்து பணிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கிருமி நாசினி மூலம் கைகளை கழுவிய பின்னரே அலுவலகத்திற்குள் சென்றதை காணமுடிந்தது.

சேலம் தாதகாப்பட்டி பகுதியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவுத்துறை அலுவலர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு கவச உடை அணிந்தும், முக கவசம் மற்றும் கையுறை உள்ளிட்டவைகளை அணிந்தும் பணியாற்றினர். மேலும், பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வந்த பொதுமக்களுக்கு அங்கு தயாராக வைக்கப்பட்டிருந்த கிருமி நாசினி கொடுத்து கைகளை சுத்தமாக கழுவிய பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இதிலும் குறிப்பாக தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்களின் விவரங்களை அங்கிருந்த ஊழியர்கள் சேகரித்து, அவர்களை அடுத்த மாதம் 3-ந் தேதிக்கு பின்னர் வருமாறு கூறி திருப்பி அனுப்பினர்.

இதுகுறித்து தாதகாப்பட்டி சார் பதிவாளர் சம்பத் கூறுகையில், தமிழக அரசின் உத்தரவுபடி பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட தொடங்கி உள்ளது. ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பு கவச உடை அணிந்து பணியாற்றி வருகிறார்கள். சேலம் மாநகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வருவதை தவிர்க்க வேண்டும். கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com