வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் பலி

கடையநல்லூர் அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் பலியானார்.
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் பலி
Published on

அச்சன்புதூர்:

கடையநல்லூர் அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் பலியானார். கணவர் காயமடைந்தார்.

விவசாயி

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டியை அடுத்த சிங்கிலிபட்டி தண்ணீர் தொட்டி தெருவைச் சேர்ந்தவர் மாரித்துரை. விவசாயி. இவருடைய மனைவி வெள்ளத்தாய் (வயது 45). இவர்களுக்கு முருகலட்சுமி, மாரித்தாய் ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் பழமையான வீட்டில் வசித்து வந்தனர்.

நேற்று முன்தினம் இரவில் மாரித்துரை வழக்கம்போல் மனைவி, மகள்களுடன் வீட்டில் தூங்கினார். அதிகாலை 1 மணி அளவில் வீட்டின் மேற்கூரை திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்ட வெள்ளத்தாய் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மாரித்துரை காயமடைந்தார். 2 மகள்களும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சொக்கம்பட்டி போலீசார் வெள்ளத்தாயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த மாரித்துரை, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com