தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கடலோர பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை

தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க விழுப்புரம் மாவட்ட கடலோர பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கடலோர பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை
Published on

விழுப்புரம்,

மும்பை தாக்குதலுக்கு பிறகு கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்துவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை கடலோர பாதுகாப்பு குழுமம், இந்திய கப்பல் படை உள்ளிட்டவைகள் நடத்தி வருகிறது.

தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் விதமாக தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, கோவா ஆகிய மாநிலங்களில் 2 நாட்கள் பாதுகாப்பு ஒத்திகை நடத்த இந்திய கப்பல் படை முடிவு செய்தது. இந்த ஒத்திகை நேற்று தொடங்கியது.

விழுப்புரம் மாவட்ட கடலோர பகுதிகளான மரக்காணம், ஆரோவில், கோட்டக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை 8 மணி முதல் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது. இந்த ஒத்திகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் டி.எஸ்.பி.க்கள் நீதிராஜ், திருமால் மற்றும் போலீசார் பலர் ஈடுபட்டனர்.

போலீசார் படகில் சென்றவாறு கடலோர பகுதிகளின் வழியாக தீவிரவாதிகள் யாரேனும் வருகிறார்களா? என்று தொலைநோக்கு கருவி மூலம் தீவிரமாக கண்காணித்தனர். இவர்களுடன் கடலோர பாதுகாப்பு படையினரும் இந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

மேலும் கடலோர கிராமங்களான கூனிமேடு, அனுமந்தை, தந்திராயன்குப்பம், அனிச்சங்குப்பம், சின்னமுதலியார்சாவடி, கீழ்பேட்டை, கைப்பானிக்குப்பம், எக்கியார்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் போலீசார் சாதாரண உடையில் சென்றவாறு, சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்தும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com