தாம்பரத்தில் தொண்டையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட இளம்பெண் சாவு - தனியார் ஆஸ்பத்திரி மீது போலீசில் புகார்

தாம்பரத்தில் தொண்டையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட இளம்பெண் பரிதாபமாக இறந்தார். தவறான சிகிச்சையால் தனது மகள் இறந்ததாக தனியார் ஆஸ்பத்திரி மீது போலீசில் இளம்பெண்ணின் தந்தை புகார் செய்து உள்ளார்.
தாம்பரத்தில் தொண்டையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட இளம்பெண் சாவு - தனியார் ஆஸ்பத்திரி மீது போலீசில் புகார்
Published on

தாம்பரம்,

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர், சாமியார் கேட், சாய்பாபா கோவில் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மகள் சங்கீதா (வயது 22). தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்த இவர், கடந்த மாதம் தாம்பரத்தில் உள்ள தீபம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர், தொண்டையில் சதை வளர்ந்துள்ளதாகவும், அறுவை சிகிச்சை செய்து அதை அகற்ற வேண்டும் எனவும் கூறினார்.

இதையடுத்து கடந்த மாதம் 20-ந்தேதி அவருக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சை முடிந்த அரை மணிநேரத்துக்குள் சங்கீதா ரத்த வாந்தி எடுத்தார். 21-ந் தேதியும் ரத்த வாந்தி எடுத்த அவர், சுயநினைவை இழந்தார். இது குறித்து கிருஷ்ணன், டாக்டர்களிடம் கூறினார். அதற்கு அவர்கள், அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட பிரச்சினையை சரிசெய்கிறோம் என கூறியதாக தெரிகிறது.

ஆனால் நேற்று முன்தினம் சங்கீதாவை வேறு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்படி கிருஷ்ணனிடம் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் கட்டாயப்படுத்தினர்.

இதுபற்றி அவர், தாம்பரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதையடுத்து தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார், தாசில்தார் சரவணன் ஆகியோர் ஆஸ்பத்திரியில் சென்று ஆய்வு நடத்தினர்.

பின்னர் சங்கீதாவை சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று முன்தினம் இரவு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சங்கீதா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணன், தனியார் ஆஸ்பத்திரியில் மேற்கொண்ட தவறான சிகிச்சையால்தான் தனது மகள் உயிரிழந்ததாகவும், அந்த ஆஸ்பத்திரி மற்றும் தனது மகளுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிருஷ்ணன் மீண்டும் தாம்பரம் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் கூறும்போது, அறுவை சிகிச்சையினபோது டாக்டர்களின் கவனக்குறைவு காரணமாக இளம்பெண் இறந்தாரா? என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தெரியவரும். அதன்பிறகு உரிய விசாரணை நடத்தப்படும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com