வேதாரண்யத்தில் ‘கஜா’ புயலில் தூக்கி வீசப்பட்ட படகுகளை மீட்கும் பணி மும்முரம்

வேதாரண்யத்தில் ‘கஜா’ புயலில் தூக்கி வீசப்பட்ட படகுகளை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
வேதாரண்யத்தில் ‘கஜா’ புயலில் தூக்கி வீசப்பட்ட படகுகளை மீட்கும் பணி மும்முரம்
Published on

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் வெள்ளப்பள்ளம், ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், கோடியக்கரை, கோடியக்காடு உள்பட ஏராளமான கடலோர கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் மீன்பிடி தொழில் பிரதான தொழிலாக விளங்குகிறது.

பெரும்பாலான மீனவர்கள் பைபர் படகு எனப்படும் சிறிய வகை படகை பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். வேதாரண்யம் பகுதியில் மீனவர்களுக்கு வாழ்வளித்து வந்த பைபர் படகுகளை கஜா புயல் சூறையாடி விட்டது. புயலின்போது 100 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் வீசிய காற்றால் பைபர் படகுகள் தூக்கி வீசப்பட்டன.

வெள்ளப்பள்ளம் மீனவர் கிராமத்தில் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 150 பைபர் படகுகள் தூக்கி வீசப்பட்டு கடுமையாக சேதம் அடைந்தன. புயலுக்கு முன்பு வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் அனைத்தும் புயலுக்கு பின்னர் ஆங்காங்கே சிதறி கிடந்தன. பழுதடைந்த அந்த படகுகளை மீண்டும் பயன்படுத்த முடியாத நிலையில் மீனவர்கள் உள்ளனர்.

அதேபோல வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களும் புயலால் சிதறடிக்கப்பட்டன. பல கிலோ மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்ட படகுகளை கடற்கரை பகுதிக்கு மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் ஆகியோரிடம் வலியுறுத்தினர். இதையடுத்து படகுகளை மீட்கும் பணிகளை தொடங்க உத்தரவிடப்பட்டது.

அதன்படி வெள்ளப்பள்ளம் பகுதியில் கடற்கரையில் இருந்து வெகு தொலைவில் கிடந்த பைபர் படகுகளை மீட்கும் பணி கிரேன் மூலம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது:-

புயலால் தூக்கி வீசப்பட்ட எங்களுடைய படகுகள் மீன்பிடிக்க ஏதுவாக இல்லை. எங்களுக்கு மாற்று தொழில் எதுவும் தெரியாது. எனவே பழுதடைந்த படகுகள் குறித்து கணக்கெடுத்து புதிய படகுகளை வாங்கித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மீனவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com