ஆசிரியர், அரசு ஊழியர்கள் கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் ரூ.4.90 லட்சம் கையாடல் முன்னாள் செயலாளர் கைது

ராசிபுரம் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் ரூ.4.90 லட்சம் கையாடல் செய்த வழக்கில், அச்சங்கத்தின் முன்னாள் செயலாளரை போலீசார் கைது செய்தனர்.
ஆசிரியர், அரசு ஊழியர்கள் கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் ரூ.4.90 லட்சம் கையாடல் முன்னாள் செயலாளர் கைது
Published on

நாமக்கல்,

ராசிபுரம் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை செயலாளராக பணியாற்றியவர் பெரியண்ணன் (வயது 52). இவர் கடந்த 4.10.2010-ம் ஆண்டு முதல் 30.11.2013-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சங்க உறுப்பினர்கள் 13 பேரிடம் வசூலிக்கப்பட்ட தொகையை வங்கி கணக்கிற்கு கொண்டு வராமலும், போலி செலவு சீட்டுகள் வைத்தும் ரூ.4 லட்சத்து 90 ஆயிரத்து 537 கையாடல் செய்து, வங்கிக்கு நிதி இழப்பு ஏற்படுத்தி இருப்பது அதிகாரிகள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து சேலம் மண்டல துணைப்பதிவாளர் (வீட்டு வசதி) தர்மலிங்கம் நாமக்கல் வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பிரபா தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, சங்கத்தின் முன்னாள் செயலாளர் பெரியண்ணன் என்பவரை கைது செய்தனர்.

பின்னர் அவரை ராசிபுரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். மாஜிஸ்திரேட்டு மாலதி 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் நாமக்கல் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com