தேனி அருகே கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றம்

தேனி அருகே கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றப்பட்டன. நெஞ்சு வலியால் கூலித்தொழிலாளி மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி அருகே கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றம்
Published on

உப்புக்கோட்டை,

தேனி அருகே வீரபாண்டியில் கவுமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலம், தேனி- கம்பம் சாலையின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இங்கு, சித்திரை திருவிழாவையொட்டி பொழுதுபோக்கு கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி சித்திரைத்திருவிழாவுக்கு சில மாதங்களே உள்ளது.

ஆனால் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமித்து வீடுகளை கட்டியுள்ளனர். இதனை திருவிழாவுக்கு முன்னதாக அகற்ற வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி நேற்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு சேது, தாசில்தார் ஷேக் அயிக், வீரபாண்டி இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார், கோவில் ஊழியர்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

பொக்லைன் எந்திரம் மூலம், ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் இடித்து தள்ளப்பட்டன. இதற்கு அங்கு வசிப்போர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் வீட்டை விட்டு வெளியே வர சிலர் மறுத்தனர். ஆனால் போலீசார் அவர்களை குண்டு கட்டாக தூக்கி வீட்டில் இருந்து வெளியேற்றினர்.

ஆக்கிரமிப்பு அகற்றி கொண்டிருக்கும் போது, அங்கு குடியிருந்த கூலித்தொழிலாளி பெருமாள் (வயது 56) என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com