

வேலூர்,
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பாடபுத்தகங்கள், எழுதுபொருட்கள், சீருடைகள் என அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் அன்றே பாடபுத்தகங்கள் வழங்கப்பட்டு வந்தது.
தற்போது பருவமுறை தேர்வு நடத்தப்படுவதால் பள்ளிகள் திறக்கப்பட்டதும் முதல் பருவ பாடபுத்தகங்கள் வழங்கப்படுகிறது. காலாண்டு தேர்வு முடிந்து பள்ளிகள் திறக்கும்போது 2-ம் பருவ பாடபுத்தகங்களும், அரையாண்டு தேர்வு முடிந்து பள்ளிகள் திறந்ததும் 3-ம் பருவ பாடபுத்தகங்களும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கடந்த டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன.
வேலூர் மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 2,100 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 2 லட்சம் மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். அவர்களுக்கு பள்ளிகள் திறந்ததும் பாடபுத்தகங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் உத்தரவின்பேரில், முதல் நாளான நேற்றே 2 லட்சம் மாணவ- மாணவிகளுக்கும் பாடபுத்தகங்கள் வழங்கப்பட்டது.