திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் பள்ளியில் மாணவிகளுக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு

திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் பள்ளியில் மாணவிகளுக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு
Published on

திருவண்ணாமலை,

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகள் மிகவும் உற்சாகத்துடன் சென்றனர். சிலர் முதல் நாள் பள்ளிக்கு செல்வதால், அந்தந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர். கோடை விடுமுறை முடிந்து தங்கள் நண்பர்களை காணும் மாணவ, மாணவிகள் தங்களுக்கு விடுமுறை நாட்களில் ஏற்பட்ட நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர்.

திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி முதல் நாள் தொடக்க விழா, விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கும் விழா, ஆசிரியர்கள், மாணவிகளுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிலட்சுமி தலைமை தாங்கினார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் முத்துக்குமாரசாமி முன்னிலை வகித்தார். முதுகலை தமிழ் ஆசிரியை தேவி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட நீதிபதி மகிழேந்தி, சார்பு நீதிபதி ராஜ்மோகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

விழாவில் பொதுத்தேர்வில் சிறந்த தேர்ச்சி சதவீதத்தை வழங்கிய ஆசிரியர்களுக்கும், சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர் மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக நேற்று பள்ளிக்கு வந்த மாணவிகளை, பள்ளியின் தலைமை ஆசிரியை ஜோதிலட்சுமி பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றார்.

இதில் நகராட்சி ஆணையர் பாரிஜாதம், பட்டதாரி ஆசிரியர் சத்தியவேலு, உதவித் தலைமை ஆசிரியர் (உயர்நிலை) வி.அனுசுயா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com