பலியான மாணவன் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்

20 அடி பள்ளத்தில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி பலியான மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பலியான மாணவன் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்
Published on

திருவொற்றியூர்,

சென்னையை அடுத்த எண்ணூர் சின்ன குப்பத்தை சேர்ந்தவர் ரஜினி. மீனவரான இவருடைய மகன் கவிநேசன் (வயது 8). இவன், அங்குள்ள மாநகராட்சி பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று முன்தினம் மாலை கவிநேசன் தனது நண்பர்களுடன் சேர்ந்து, அங்கு அனல்மின் நிலைய விரிவாக்க பணிக்காக தண்ணீர் எடுக்க தோண்டப்பட்ட 20 அடி பள்ளத்தில் குட்டைபோல் தேங்கி நின்ற தண்ணீரில் மீன்பிடித்து விளையாடிய போது, நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.

இந்த சம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பலியான மாணவன் கவிநேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பிரேத பரிசோதனை முடிந்து, நேற்று மாணவனின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்க ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்தனர். ஆனால் மாணவனின் உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுத்து விட்டனர்.

மாணவனின் உயிரை பலி வாங்கிய 20 அடி பள்ளத்தை உடனடியாக மூடவேண்டும். உயிரிழந்த மாணவனின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மாணவனின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் திடீரென எண்ணூர் கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த எண்ணூர் போலீசார், சம்பவ இடத்துக்கு எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க பணியில் ஈடுபட்டு வந்த அதிகாரிகளை வரவழைத்து, சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதற்கு அதிகாரிகள், இதுபற்றி உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதை ஏற்று சாலை மறியலை கைவிட்ட அவர்கள், பின்னர் மாணவனின் உடலை வாங்கிக்கொண்டனர். இனால் எண்ணூர் கடற்கரைசாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com