

சிதம்பரம்,
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள அகரம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசமூர்த்தி(வயது 35). தச்சுத்தொழிலாளி. இவரது மனைவி ஜான்சி(28). திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு பிரின்சிகா(7), கனியா(5), ஹரினி(3) என்று 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் சீர்காழியில் உள்ள உறவினர் வீட்டில் நடந்த காதுகுத்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, கணேசமூர்த்தி, ஜான்சி ஆகியோர் தங்களது இளைய மகள் ஹரினியுடன் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் சீர்காழிக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து மதியம் அதே மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பினர்.
அப்போது சிதம்பரத்தில் கடலூர் ரோட்டில் உள்ள உழவர் சந்தை அருகே வந்து கொண்டிருந்த போது, இவர்களுக்கு பின்னால் சிதம்பரத்தில் இருந்து கீழமனக்குடி நோக்கி அரசு பஸ் ஒன்று வந்தது. அப்போது பஸ் டிரைவர் ஒலி (ஹாரன்) எழுப்பியதாக தெரிகிறது. இதையடுத்து, கணேசமூர்த்தி பஸ்சுக்கு வழிவிடுவதற்காக சாலையோரமாக மோட்டார் சைக்கிளை ஒதுக்கினார். அந்த பகுதி குறுகலான சாலை என்பதுடன், பஸ் அருகே வந்ததால் அவர் நிலைதடுமாறியதாக தெரிகிறது. இதில் அவருக்கு பின்னால் அமர்ந்திருந்த ஜான்சி தான் கையில் வைத்திருந்த குழந்தை ஹரினியுடன் பின்பக்கமாக சாலையில் விழுந்தார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் தாய், மகள் மீது பஸ்சின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர்கள் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
மேலும் கணேசமூர்த்தி சாலையோரமாக மோட்டார் சைக்கிளுடன் விழுந்ததால், அவர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். தனது கண் எதிரேயே மனைவி, மகள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அவர் கதறி அழுதார்.
இந்த நிலையில் விபத்தை பார்த்த அப்பகுதி மக்கள் அங்கு ஒன்று திரண்டு வந்து, ஆத்திரத்தில் அரசு பஸ் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். சிலர் கல்வீச்சிலும் ஈடுபட்டனர். இதையடுத்து பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் இறங்கி ஓடினர். மேலும் சேத்தியாத்தோப்பில் இருந்து சிதம்பரம் வந்த அரசு பஸ்சையும் அடித்து நொறுக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இந்நிலையில் விபத்து பற்றி அறிந்த சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் விரைந்து வந்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து ஜான்சி, ஹரினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களது உறவினர்கள் திரண்டு வந்து, கதறி அழுதபடி இருந்தனர். இதனால் மருத்துவமனை வளாகமே நேற்று சோகத்தில் மூழ்கிய நிலையில் காணப்பட்டது. தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே விபத்து நேர்ந்தவுடன் ஆத்திரத்தில் அந்த பகுதி மக்கள் அரசு பஸ்சை அடித்து நொறுக்கியதால், அங்கு பெரும் அசம்பாவித சம்பவம் ஏற்படும் நிலை இருந்தது. இதனால் அந்த சமயத்தில் சிதம்பரத்தில் இருந்து கடலூர் நோக்கி வந்த அரசு பஸ்கள் அனைத்தையும், மீண்டும் சிதம்பரம் பஸ் நிலையத்துக்கே திருப்பி விட்டனர். பின்னர் ஒரு மணி நேரத்துக்கு பிறகு பஸ்கள் அந்த வழியாக மீண்டும் இயக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நீடித்தது.