திருவளக்குறிச்சி பகுதியில் இயங்கும் கல்குவாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் கிராம மக்கள் மனு

பாடாலூர் அருகே உள்ள திருவளக்குறிச்சி பகுதியில் இயங்கும் கல்குவாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.
திருவளக்குறிச்சி பகுதியில் இயங்கும் கல்குவாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் கிராம மக்கள் மனு
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். இதில் கலெக்டர், மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினர். இந்நிலையில் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே உள்ள திருவளக்குறிச்சி பகுதியில் இருந்து திரண்டு வந்த பொதுமக்கள் கலெக்டர் சாந்தாவிடம் ஒரு மனு அளித்தனர். அதில், எங்கள் கிராமத்தில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். திருவளக்குறிச்சியில் வசிக்கும் பெரும் பகுதி மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் கால்நடைகளையும் வளர்த்து வருகின்றனர்.

எங்கள் ஊரில் உள்ள 2 ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து இடங்களில் பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது. மேலும் ஏரிகளுக்கு தண்ணீர் வரும் இடங்களில் அருகே கல்குவாரிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் 2 ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்து விட்டது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்குவாரிகளில் வைக்கப்படும் வெடியானது, வெடிக்கும் போது எங்கள் கிராமத்தில் நில அதிர்வை ஏற்படுத்துகிறது. எனவே திருவளக்குறிச்சி பகுதியில் இயங்கும் கல்குவாரிகளை தடை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.

ஒருங்கிணைந்த பெரம்பலூர் டிப்பர் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் அன்பழகன் தலைமையில், அதன் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அதில், பெரம்பலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் லாரிகளுக்கு நுழைவு வரி விதிக்காமல் இருந்த நகராட்சி நிர்வாகம் வண்டிபேட்டையில் மட்டும் வரி வசூல் செய்ய உத்தரவிட்டது. ஆனால் தற்போது பெரம்பலூர் நகரில் அனைத்து பகுதிகளிலும் சட்ட விரோதமாக லாரிகளுக்கு நுழைவு வரி வசூல் செய்யப்படுகிறது. தற்போது டீசல் மற்றும் இதர பொருட்களின் விலையேற்றத்தால் லாரிகளை இயக்குவதற்கு சிரமமாக உள்ளது. இந்நிலையில் நுழைவு வரி வசூலிப்பதால் லாரி உரிமையாளர்கள் தொழில் செய்ய முடியாமல் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே பெரம்பலூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் சட்ட விரோதமாக வரி வசூலிப்பதற்கு தடை பிறப்பிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

ஆலத்தூர் தாலுகா காரை கிராமத்தில் உள்ள இந்திரா நகரில் வசிக்கும் பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்களது பகுதிக்கு மிக அருகே மயானபகுதி அமைக்க இடம் தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மயான பகுதி அமைந்தால் எங்கள் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும். எனவே மயானபகுதி அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

பெரம்பலூர் தாலுகா எறைய சமுத்திரம் கிராமத்தில் உள்ள அம்மன் நகரில் குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடி வருகிறது. மேலும் தெரு விளக்குகள் எரிவதில்லை. இதனால் இரவில் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். குப்பைகளை அள்ளாததால் தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே அம்மன் நகர் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் குடிநீர் நிரப்பவும், பழுதடைந்த அடி பம்புகளையும், தெரு விளக்குகளை யும் சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வேலையில்லாமல் இருக்கும் கிராம மக்களுக்கு நூறு நாள் வேலை திட்டத்தை எங்கள் பகுதியில் செயல்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கலெக்டர் சாந்தாவிடம் கொடுத்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதே போல் பெரம்பலூர் நகராட்சி 5-வது வார்டுக்கு உட்பட்ட கணேசன் காலனியில் உள்ள மேட்டுத் தெருவை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில், எங்கள் தெருவில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஆனால் தண்ணீர் தொட்டி ஒன்று மட்டும் தான் உள்ளது. அந்த தண்ணீர் தொட்டியில் 10 குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தான் எப்போதும் தண்ணீர் பிடித்து வருகின்றனர். எங்களுக்கு தண்ணீர் தருவதே இல்லை. இதனால் தண்ணீர் காசு கொடுத்து வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது எங்கள் தெருவில் கூடுதலாக தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர். பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

பின்னர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் சத்திரமனை ஊராட்சியில் வரத்து வாய்க்கால் தூர் வாருதல் பணியின்போது உடல்நலக்குறைவால் இறந்துபோன நல்லேந்திரன் குடும்பத்திற்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் சாந்தா வழங்கினார்.

கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஸ்ரீதர், மகளிர் திட்ட இயக்குனர் தேவநாதன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மனோகரன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பாரதிதாசன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com