திருத்துறைப்பூண்டி அருகே பாரபட்சமின்றி நிவாரணம் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் - 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திருத்துறைப்பூண்டி அருகே பாரபட்சமின்றி நிவாரணம் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி அருகே பாரபட்சமின்றி நிவாரணம் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் - 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
Published on

திருத்துறைப்பூண்டி,

கஜா புயல் காரணமாக திருத்துறைப்பூண்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். நிவாரண பொருட்களை விரைந்து வழங்க வேண்டும் என்பதையும், பாரபட்சமின்றி அனைவருக்கும் நிவாரண பொருட்களை வழங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி திருத்துறைப்பூண்டி பகுதியில் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் அரசு வழங்கும் 27 வகையான நிவாரண பொருட்களை அனை வருக்கும் பாரபட்சமின்றி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று ஆதிரெங்கம் கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டவர்கள் கட்டிமேடு கடைத்தெருவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாதன், சப்-இன்ஸ்பெக்டர்கள் குணா, ராஜேந்திரன் ஆகியோர் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர். இதனால் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். மறியல் காரணமாக திருத்துறைப்பூண்டி- வேதாரண்யம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல மன்னார்குடி அருகே உள்ள மேலவாசல் என்ற இடத்தில் நெம்மேலி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சந்திராகருணாநிதி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன், தி.மு.க. ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் சரவணன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இன்னும் 2 நாட்களில் மின் இணைப்பு பிரச்சினைகள் சீர்செய்யப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததின் பேரில் மறியலை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

இதனால் மன்னார்குடி- தஞ்சாவூர் மற்றும் ஒரத்தநாடு சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com