

கன்னியாகுமரி,
முக்கடல்கள் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் கடலின் நடுவே உள்ள பெரிய பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைந்துள்ளது. இதன் அருகே மற்றொரு பாறையில் 133 அடி உயர பிரம்மாண்டமான திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலையை தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் படகுகளில் சென்று பார்த்து ரசித்து வருகிறார்கள். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வந்தன.
இதில் விவேகானந்தா படகு பழுதடைந்ததால் சீரமைப்பு பணிக்காக சின்னமுட்டம் படகு கட்டும் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ரூ.18 லட்சம் செலவில் படகை சீரமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. தற்போது பணிகள் முடிவடைந்து சொகுசு இருக்கைகள், நவீன வசதிகளுடன் படகு புதுபொழிவு பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து விவேகானந்தா படகு இன்று காலை சின்னமுட்டத்தில் இருந்து வெள்ளோட்டமாக கொண்டு வரப்படுகிறது.
விநாயகர்சதுர்த்தி, ஓணம் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை வர உள்ளதால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிவார்கள். எனவே சுற்றுலா பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு விவேகானந்தா படகு மீண்டும் நாளை(புதன்கிழமை) முதல் சேவையை தொடங்குகிறது என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாளர் சுடலை முத்து தெரிவித்தார்.