நாட்டுத்துப்பாக்கியுடன் கூலித்தொழிலாளி கைது

கந்திகுப்பம் அருகே நாட்டுத்துப்பாக்கியுடன் கூலித்தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
நாட்டுத்துப்பாக்கியுடன் கூலித்தொழிலாளி கைது
Published on

பர்கூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா குருவிநாயனப்பள்ளி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் கோவிந்தராஜ். இவர் நேற்று முன்தினம் தனது உதவியாளர்கள் சக்தி, செவத்தான், மணி ஆகியோருடன் பர்கூர் தாலுகா கந்திகுப்பம் அருகே உள்ள தொந்திதாசன் கொல்லை பக்கமுள்ள குன்றுமலை அடிவாரம் பகுதியில் ரோந்து சென்றார்.

அந்த நேரம் அந்த வழியாக கையில் நாட்டுத்துப்பாக்கியுடன் ஒருவர் வந்தார். அவரை அதிகாரிகள் நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவரது பெயர் முனியப்பன் (வயது 48) என்பதும், பர்கூர் குருவிநாயனப்பள்ளி பக்கமுள்ள தொந்திரராசன் கொல்லை இருளர் காலனியைச் சேர்ந்தவர் என்றும், கூலித்தொழிலாளியான அவர் உரிமம் பெறாத நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது.

தொழிலாளி கைது

இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர், முனியப்பனை கந்திகுப்பம் போலீசில் ஒப்படைத்தார். இதைத் தொடர்ந்து கந்திகுப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிசாமி, முனியப்பனை கைது செய்து விசாரணை நடத்தினார். மேலும் அவரிடம் இருந்து உரிமம் பெறாத நாட்டுத்துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நாட்டுத்துப்பாக்கியை வைத்து அவர் அந்த பகுதியில் வேட்டைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com