கடலில் குளித்த 3 பேரை அலை இழுத்துச் சென்றது: 2 பேர் மீட்பு; பிளஸ்-2 மாணவர் கதி என்ன?

கிறிஸ்துமஸ் தினத்தன்று கீழமணக்குடி கடலில் குளித்த 3 பேரை ராட்சத அலை இழுத்துச் சென்றது. இதில் 2 பேர் மீட்கப்பட்டனர். பிளஸ்-2 மாணவர் கதி என்ன? என்பது தெரியவில்லை. கடலில் அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கடலில் குளித்த 3 பேரை அலை இழுத்துச் சென்றது: 2 பேர் மீட்பு; பிளஸ்-2 மாணவர் கதி என்ன?
Published on

தென்தாமரைகுளம்,

குமரி மாவட்டம் தென்தாமரைகுளம் போலீஸ் சரகம் கீழமணக்குடி டாடா காலனியை சேர்ந்தவர் பெஸ்கி (வயது 54), மீனவர். அவருடைய மனைவி விஜி (48). இவர்களுக்கு பூபால சாஜன் (20), பூபால சார்வின் (17) என்ற 2 மகன்கள். சாஜினி (18) என்ற மகளும் உள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நேற்று காலை 10.30 மணி அளவில் பெஸ்கி தனது குடும்பத்தினருடன் கீழமணக்குடி கடலில் குளித்தார். அப்போது பிளஸ்-2 மாணவரான பூபால சார்வின் நண்பர்கள் 4 பேருடன் தனியாக குளித்துக்கொண்டு இருந்தார்.

அப்போது கடலில் இருந்து வந்த ராட்சத அலை பூபால சார்வின் உள்பட 3 பேரை இழுத்து சென்றது. உடனே அவர்கள் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என கூச்சல் போட்டனர். அதைத்தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் கடலில் குதித்து 2 பேரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால் பூபால சார்வினை மீட்பதற்குள் அலை இழுத்து சென்று விட்டது.

உடனே இதுபற்றி கன்னியாகுமரி தீயணைப்பு நிலையம், குளச்சல் கடலோர பாதுகாப்பு படை மற்றும் தென்தாமரைகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

அதைத்தொடர்ந்து மீனவர்கள் 5 படகுகளில் சென்று மாணவர் பூபால சார்வினை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர் அவரது கதி என்ன? என்பது தெரியவில்லை.

கிறிஸ்துமஸ் தினத்தன்று நடந்த இந்த பரிதாபத்தால் அந்த பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com