

கூடலூர்,
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் காட்டுயானைகள் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் குனில்வயல் பகுதிக்குள் காட்டுயானை ஒன்று புகுந்தது. தொடர்ந்து அங்கு பயரிடப்பட்டு இருந்த வாழை, பாக்கு உள்ளிட்ட மரங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தது.
பின்னர் அதே பகுதியில் உள்ள மணியம்மா(வயது 52) என்ற பெண் தோட்ட தொழிலாளி யின் வீட்டு முன்பக்க ஜன்னலை உடைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், பின்வாசல் வழியாக வெளியேறி பக்கத்து வீட்டில் தஞ்சம் புகுந்தார். விடிய, விடிய அப்பகுதியில் முகாமிட்டு இருந்த காட்டுயானை, நேற்று அதிகாலை அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது சேதம் அடைந்த வீட்டை சீரமைக்க உரிய இழப்பீடு வழங்க வேண்டும், மீண்டும் காட்டுயானை ஊருக்குள் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் உறுதி அளித்தனர். இதேபோன்று ஓவேலி, நாடுகாணி பகுதியில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் மாலை மற்றும் இரவு நேரத்தில் பொதுமக்கள் மிகுந்த கவனமுடன் வெளியே வர வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரித்து இருக்கின்றனர்.