கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் தவறி விழுந்து சாவு

நாங்குநேரி அருகே, கணவருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற பெண் தவறி விழுந்து இறந்தார். நாய் குறுக்கே பாய்ந்ததால் இந்த பரிதாப சம்பவம் நடந்தது.
கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் தவறி விழுந்து சாவு
Published on

நாங்குநேரி,

நாங்குநேரியை சேர்ந்தவர் முருகன் (வயது 50). அவருடைய மனைவி நாச்சியார் (45). இருவரும் நாங்குநேரி- களக்காடு ரோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் உணவகம் நடத்தி வருகின்றனர். நேற்று மாலையில் உணவக வேலை முடிந்ததும் கல்லூரியில் இருந்து புறப்பட்டு இருவரும் மோட்டார்சைக்கிளில் நாங்குநேரியை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

நாங்குநேரி அருகே கலுங்கடி என்ற இடத்தில் வந்த போது திடீரென மோட்டார்சைக்கிளின் குறுக்கே நாய் பாய்ந்தது. இதனால் நாய் மீது மோதாமல் இருப்பதற்காக முருகன் தனது மோட்டார்சைக்கிளை பிரேக் பிடித்தார். இதனால் மோட்டார்சைக்கிள் நிலைதடுமாறியது.

இதனால் மோட்டார்சைக்கிளில் அவருக்கு பின்னால் இருந்த நாச்சியார் தவறி ரோட்டில் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த முருகன், மனைவியின் உடலை பார்த்து கதறி அழுதார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் நாங்குநேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். நாச்சியாரின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கணவர் கண் முன்னே மனைவி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com