போலீசாரால் தேடப்பட்டு வந்த பெண் டாக்டர் காதல் கணவருடன் கோர்ட்டில் ஆஜர்

போலீசாரால் தேடப்பட்டு வந்த பயிற்சி பெண் டாக்டர், காதல் கணவருடன் புதுச்சேரி கோர்ட்டில் ஆஜரானார்.
போலீசாரால் தேடப்பட்டு வந்த பெண் டாக்டர் காதல் கணவருடன் கோர்ட்டில் ஆஜர்
Published on

புதுச்சேரி,

சென்னை மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் இளங்கோ. இவர் மனைவி ஆண்டாள். இவருடைய மகள் சுபாஷினி (வயது24). இவர் ரஷ்யாவில் எம்.பி.பி.எஸ். படித்துள்ளார். தற்போது புதுவை கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக பணியாற்றி வருகிறார். அவர், புதுவை விக்னேஷ்வரா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வீடு எடுத்து தங்கி மருத்துவமனைக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் ஆண்டாள் தனது மகள் சுபாஷினிக்கு திருமண ஏற்பாடு செய்து வந்தார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்து வந்தார். இந்த நிலையில் ஆண்டாள், சுபாஷினியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது அவருடைய போன் சுவிட் ஆப் செய்யப்பட்டிருந்தது. உடனே ஆண்டாள் புதுவையில் உள்ள மகள் தங்கி உள்ள வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு பூட்டப்பட்டு இருந்தது. மருத்துவமனைக்கு சென்று விசாரித்தபோது கடந்த 2 நாட்களாக சுபாஷினி அங்கும் வரவில்லை என்பது தெரியவந்தது. எனவே கோரிமேடு போலீஸ் நிலையத்தில் ஆண்டாள் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சுபாஷினியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் புதுச்சேரியில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சுபாஷினி, தனது காதல் கணவரான புத்துப்பட்டு பகுதியை சேர்ந்த அகிலனுடன் ஆஜரானார். அப்போது சுபாஷினி கூறுகையில், நானும், அகிலனும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்தோம். இதுபற்றி கடந்த 24-ந் தேதி எங்களது பெற்றோரிடம் தெரிவித்தோம். திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை. எனவே கடந்த 28-ந் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டோம் என்றார். அதன்பின், அவர்கள் இருவரையும் கோரிமேடு போலீஸ் நிலையத்திற்கு செல்லும்படி நீதிபதி கூறினார்.

அதையடுத்து கோரிமேடு போலீஸ் நிலையத்திற்கு சுபாஷினி, அகிலன் ஆகியோர் சென்றனர். போலீஸ் நிலையத்தில் சுபாஷினி, தான் அகிலனுடன் செல்ல விரும்புவதாக கூறினார். அதையடுத்து சுபாஷினியின் விருப்பப்படி அவரை அகிலனுடன் அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com