காரைக்குடி அருகே சாப்பாடு கேட்ட தந்தையை வெட்டிக்கொன்ற தொழிலாளி; போலீசார் கைது செய்தனர்

காரைக்குடி அருகே சாப்பாடு கேட்ட தந்தையை வெட்டிக் கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
காரைக்குடி அருகே சாப்பாடு கேட்ட தந்தையை வெட்டிக்கொன்ற தொழிலாளி; போலீசார் கைது செய்தனர்
Published on

காரைக்குடி,

காரைக்குடி சாக்கோட்டை அருகே உள்ள பெத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சேவுகன் (வயது 80). இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சில வருடங்களாக படுத்த படுக்கையாக இருந்து வந்தார். இவரது மகன் வீராசாமி (52). கூலித்தொழிலாளி.

இந்த நிலையில் சம்பவத்தன்று வீராசாமியின் மனைவி மற்றும் குழந்தைகள் திருமயம் அருகே உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு, சென்று விட்டு இரவு வீடு திரும்பினர். அப்போது வீட்டில் சேவுகன் அரிவாளால் கழுத்தில் வெட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்து வீராசாமியின் மனைவி சாக்கோட்டை போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜாக்குலின் சம்பவ இடத்திற்கு வந்து சேவுகனின் உடலை கைப்பற்றி காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

இந்த கொலை சம்பவத்தில் வீராசாமி மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரைப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்தான் தனது தந்தையை வெட்டிக்கொலை செய்தார் என்பது தெரிய வந்தது.

சம்பவத்தன்று மனைவி மற்றும் குழந்தைகள் திருமயத்துக்கு சென்றிருந்த நிலையில் வீராசாமி குடி போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டில் அவரது தந்தை சேவுகன் மட்டும் இருந்தார். அப்போது பசியில் இருந்த சேவுகன், வீராசாமியிடம் சாப்பாடு கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவர் எனக்கே சோறில்லை என்று கூறினாராம். ஆனாலும் பசி தாங்க முடியாமல் தொடர்ந்து சேவுகன் சாப்பாடு கேட்டதால், ஆத்திரமடைந்த வீராசாமி, அருகில் கிடந்த அரிவாளை எடுத்து தனது தந்தையின் கழுத்தில் வெட்டியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த சேவுகன் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். பின்னர் வீராசாமி எதுவும் தெரியாதது போல் வீட்டில் இருந்து வெளியே சென்று அப்பகுதியில் சுற்றித்திரிந்துள்ளார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் வீராசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com