டாஸ்மாக் கடை சுவரில் துளைபோட்டு மது பாட்டில்கள் திருட்டு

டாஸ்மாக் கடை சுவரில் துளைபோட்டு உள்ளே புகுந்த மர்மநபர்கள், மது பாட்டில்களை திருடிச்சென்ற சம்பவம் கும்மிடிப்பூண்டி பகுதியில் பரபரபரப்பை ஏற்படுததியது.
டாஸ்மாக் கடை சுவரில் துளைபோட்டு மது பாட்டில்கள் திருட்டு
Published on

சென்னை,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ரெட்டம்பேடு கிராமத்தில் வயல்வெளியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் கும்மிடிப்பூண்டி போலீசார் மதுக்கடைக்கு சென்று வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கடையின் பக்கவாட்டு சுவரில் துளை போடப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து டாஸ்மாக் கடையின் விற்பனையாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

மதுபாட்டில்கள் திருட்டு

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், நள்ளிரவில் மர்மநபர்கள் டாஸ்மாக் கடையின் முன்பக்க இரும்பு கிரில் கேட் மற்றும் இரும்பு ஷெட்டரை உடைக்க முயற்சித்துள்ளனர். ஆனால் முடியாததால், கடையின் பக்கவாட்டு சுவரில் கடப்பாரையால் இடித்து துளைபோட்டு உள்ளே புகுந்து, அங்கிருந்த 33 மதுபாட்டில்களை திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.

கடையில் பணம் எதுவும் இல்லை. குறைந்த அளவிலான மதுபாட்டில்கள் மட்டும் திருட்டு போனது. முன்னதாக மர்மநபர்கள், கடையின் உள்ளே இருந்த கண்காணிப்பு கேமராவை சாக்கு பையை போட்டு மூடி உள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளில் இந்த டாஸ்டாக் கடையில் நடைபெறும் 3-வது திருட்டு சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com