திருமாவளவன் தலைக்கு ரூ.1 கோடி அறிவிப்பு: இந்து முன்னேற்ற கழக நிர்வாகியின் உருவ பொம்மை எரித்து போராட்டம்

திருமாவளவன் தலைக்கு ரூ.1 கோடி அறிவித்த இந்து முன்னேற்ற கழக நிர்வாகியின் உருவ பொம்மையை எரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமாவளவன் தலைக்கு ரூ.1 கோடி அறிவிப்பு: இந்து முன்னேற்ற கழக நிர்வாகியின் உருவ பொம்மை எரித்து போராட்டம்
Published on

கும்பகோணம்,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், இந்து கோவில்களை இடித்து விட்டு, புத்த கோவில்களை கட்ட வேண்டும் என கூறினார். இதை கண்டித்து திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இந்து முன்னேற்ற கழக நிர்வாகி கோபிநாத் என்பவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் தலையை துண்டிப்போருக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என அறிவித்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கும்பகோணம் அருகே உள்ள திருப்புறம்பியத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் மோகன் தலைமை தாங்கினார். இதில் கோபிநாத்தின் உருவபொம்மை பாடையில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

இந்த ஊர்வலம் திருப்புறம்பியம் கடைத்தெரு உள்ளிட்ட இடங்கள் வழியாக அப்பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரை சுடுகாட்டில் நிறைவடைந்தது. அங்கு இறுதி சடங்குகள் நடத்தி, கோபிநாத்தின் உருவபொம்மையை, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எரித்தனர். இந்த போராட்டத்தில் 70-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு, கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com