திருநின்றவூர் பகுதியில் வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய 2 வாலிபர்கள் கைது

திருநின்றவூர் பகுதியில் வீடுகளின் பூட்டை உடைத்து நகைகளை திருடியதாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 பவுன் தங்கநகை மீட்கப்பட்டது.
திருநின்றவூர் பகுதியில் வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய 2 வாலிபர்கள் கைது
Published on

ஆவடி,

திருநின்றவூர் பகுதியில் பல வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் தங்க நகைகளை தொடர்ந்து திருடி வந்தனர். இதையடுத்து போலீஸ் துணை கமிஷனர் ஈஸ்வரன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை திருநின்றவூர் பஸ் நிலையம் அருகே சந்தேகப்படும்படி நின்றுகொண்டு இருந்த 2 வாலிபர்களை பிடித்து தனிப்படை போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். இதையடுத்து அவர்கள் இருவரையும் திருநின்றவூர் போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.

விசாரணையில் பிடிபட்டவர்கள் திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பஜனை கோவில் தெருவை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 27) மற்றும் பட்டாபிராம் அடுத்த நெமிலிச்சேரி ஸ்ரீநாத் நகரை சேர்ந்த ரவீந்திரன் (26) என்பது தெரியவந்தது. மேலும் இருவரும் திருநின்றவூர் பகுதியில் வீடுகளின் பூட்டை உடைத்து நகைகளை திருடியதும் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், நேற்று மாலை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 10 பவுன் தங்க நகை மீட்கப்பட்டது.

கைதான கார்த்திகேயன் மீது அம்பத்தூர் போலீஸ் நிலையத்திலும், ரவீந்திரன் மீது ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் நிலையத்திலும் ஏற்கனவே குற்ற வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com