

திருத்தணி,
திருத்தணியில் உள்ள பச்சரிசி மலை மற்றும் அதன் பின்னால் உள்ள மலையில் நேற்றுமுன்தினம் மாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. கடுமையான வெயிலால் காய்ந்து இருந்த மரம், செடி, கொடிகளில் தீ மளமளவென பரவியது.
இதனால் மலையில் உள்ள அரிய வகை மரங்கள், மூலிகைச்செடிகள், பறவைகள், பாம்புகள், முயல்கள், முள்ளம் பன்றிகள் உள்பட பல வகையான உயிரினங்கள் தீயில் கருகின.
மலை காட்டுப்பகுதியில் தீ கொழுந்துவிட்டு எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் இதுபற்றி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பல மணிநேரம் போராடி மலைகளில் எரிந்த தீயை அணைத்தனர்.
தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இது தொடர்பாக திருத்தணி வனத்துறையினர், வருவாய் துறையினர் மற்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேலும் யாராவது வேண்டும் என்றே தீ வைத்தனரா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.