திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வக்கீல்கள் போராட்டம்

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வக்கீல்கள் போராட்டம்
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் ஜே.என்.சாலையில் மாவட்ட மகளிர் விரைவு கோர்ட்டு மற்றும் குடும்பநல கோர்ட்டு உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் உள்ளனர். இந்த நிலையில் மாவட்ட மகளிர் விரைவு கோர்ட்டு அரசு வக்கீல், வழக்குக்காக வரும் புகார்தாரர்களிடம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களிடமும் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறார்.

இதனால் வழக்குகளுக்கு வருபவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதை அறிந்த மாவட்ட மகளிர் கோர்ட்டு வக்கீல்கள் கடந்த 4-ந்தேதியன்று ஒருதலைப்பட்சமாக செயல்படும் அரசு வக்கீல் மீது நடவடிக்கை எடுத்து அவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பியவாறு திருவள்ளூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 3-ந்தேதி முதல் மாவட்ட மகளிர் விரைவு கோர்ட்டில் அனைத்து வக்கீல்களும் தொடர்ந்து கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாவட்ட மகளிர் விரைவு கோர்ட்டு அரசு வக்கீலை பணியிடை நீக்கம் செய்யக்கோரி திருவள்ளூர் மாவட்ட வக்கீல்கள் சங்கம் சார்பில் மாவட்டம் முழுவதும் நேற்று ஒரு நாள் அனைத்து வக்கீல்களும் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை திருவள்ளூர் மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர்கள் நித்தியானந்தம், ஆதாம், தாமோதரன், புருஷோத்தமன், மாவட்ட செயலாளர்கள் ஜான்பால், கார்த்திக், ரகுபதி, முரளி, சந்திரகுமார், சீனிவாச ராவ், கவிதா,செல்வம் என 100-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

அப்போது அவர்கள் ஒருதலைபட்சமாக செயல்படும் மாவட்ட மகளிர் விரைவு கோர்ட்டு அரசு வக்கீலை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். பின்னர் அவர்கள் அனைவரும் இது தொடர்பான புகார் மனுவை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் அளித்தனர். அந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது உரிய விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் வக்கீல்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com