திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் திருவாரூர் முருகனின் அண்ணன் மகன் கைது

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்புடைய திருவாரூர் முருகனின் அண்ணன் மகன் முரளியை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் திருவாரூர் முருகனின் அண்ணன் மகன் கைது
Published on

திருச்சி,

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கடந்த 2-ந் தேதி அதிகாலை மர்ம நபர்கள் உள்ளே புகுந்து ரூ.12 கோடியே 41 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 7 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கு தொடர்பாக திருவாரூர் மடப்புரத்தை சேர்ந்த மணிகண்டனை (வயது 34) வாகன சோதனையின்போது போலீசார் பிடித்தனர். விசாரணையில் திருவாரூர் சீராத்தோப்பை சேர்ந்த பிரபல கொள்ளையன் முருகன், அவரது அக்காள் மகன் சுரேஷ் உள்பட சிலர் லலிதா ஜூவல்லரி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. தப்பி சென்ற முருகன், சுரேஷ் உள்ளிட்ட கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள். இதற்கிடையே இந்த கொள்ளை வழக்கு தொடர்பாக மணிகண்டன், சுரேஷின் தாய் கனகவள்ளி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் கைதான 2 பேரையும் வரும் 18-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், இந்த கொள்ளை வழக்கில் முருகனின் உறவினர்கள் 14 பேரை போலீசார் பிடித்து திருச்சிக்கு அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் முருகனின் அண்ணன் செல்வத்தின் மகன் முரளியை (28) தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரையும் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தலைமறைவாக உள்ள முருகன் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் பெரும் பகுதியை எடுத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நகைகளை மீட்க தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு முருகன் அரங்கேற்றிய பல்வேறு வங்கி கொள்ளை சம்பவங்களில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை புதுச்சேரியை சேர்ந்த ஒரு தரகர் மூலமாக தான் விற்பனை செய்துள்ளார். ஆகையால் தற்போது லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடித்த நகைகளையும் முருகன் புதுச்சேரிக்கு கொண்டு சென்று பதுக்கி வைத்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் தனிப்படையில் ஒரு பிரிவினர் புதுச்சேரிக்கும், மற்றொரு பிரிவினர் மதுரைக்கும் சென்று விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com