திருவாரூரில்: சத்துணவு ஊழியர்கள் 2-வது நாளாக சாலை மறியல் - 500 பேர் கைது

திருவாரூரில் நேற்று 2-வது நாளாக சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 500 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூரில்: சத்துணவு ஊழியர்கள் 2-வது நாளாக சாலை மறியல் - 500 பேர் கைது
Published on

திருவாரூர்,

வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு முழுமையான பணப்பலன்களை வழங்க வேண்டும். உணவு மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.

இதில் 21 மாத கால நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் கடந்த 25-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி திருவாரூர் தாசில்தார் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று முன்தினம் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக சத்துணவு ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியல் போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜ சேகர் முன்னிலை வகித்தார்.

இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பைரவ நாதன், மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியலின்போது சத்துணவு ஊழியர்கள் ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் கலந்து கொண்ட சத்துணவு ஊழியர்கள் 500 பேரை திருவாரூர் டவுன் போலீசார் கைது செய்தனர். மறியல் காரணமாக திருவாரூர்-தஞ்சை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com