தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றம் பக்தர்கள் இன்றி நடந்தது

தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றம் நேற்று பக்தர்கள் இன்றி நடந்தது.
தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றம் பக்தர்கள் இன்றி நடந்தது
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி பனிமயமாதா ஆலயம், உலகப்புகழ் பெற்ற பேராலயம் ஆகும். சாதி, மதம் கடந்து அனைத்து தரப்பினரும் இங்கு வந்து அன்னையை பிரார்த்தனை செய்வது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி திருவிழா நடந்து வருகிறது.

இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால், பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

கொடியேற்றம்

நேற்று காலையில் ஆலயம் பூட்டப்பட்ட நிலையில் பாதிரியார்கள் மட்டும் பங்கேற்ற பிரார்த்தனை நடந்தது. காலை 7 மணி அளவில் தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமை தாங்கி, ஆலய கொடிமரத்தில் கொடியேற்றினார்.

அப்போது புறாக்கள் பறக்க விடப்பட்டன. மேலும் வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழகம் சார்பில், இழுவை கப்பல் மூலம் ஒலி எழுப்பப்பட்டது.

பின்னர் ஆலயத்துக்குள் சிறப்பு பிரார்த்தனைகள் தொடங்கின. அப்போது மக்கள் பங்கேற்காத வகையில் ஆலயத்தின் கதவுகள் மூடப்பட்டன. ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கும் கொடியேற்று விழா, கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்களே இன்றி நடந்தது.

போலீஸ் குவிப்பு

விழாவையொட்டி பொதுமக்கள் கூடுவதை தடுப்பதற்காக, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

ஆலயத்துக்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் தடுப்புகள் அமைத்து கண்காணித்தனர். அந்த வழியாக வந்த ஒரு சிலரையும் போலீசார் திருப்பி அனுப்பினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com