திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்

திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோவில் பெரிய தேரோட்டம் நேற்று தொடங்கி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்
Published on

எலச்சிபாளையம்,

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உமையொரு பாகனாக சிவபெருமான் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அர்த்தனாரீஸ்வரர் மலைக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி விசாகத்தையொட்டி தேர்த்திருவிழா நடைபெறும்.

இந்த ஆண்டு இக்கோவிலில் வைகாசி விசாக தேர்த்திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவையொட்டி நேற்று முன்தினம் சிறிய தேரோட்டம் நடந்தது.

இதையொட்டி அலங்கரிக்கப்பட்டிருந்த பெரிய தேரில் மங்கைபங்கன் பரிவாரங்களுடன் எழுந்தருளினார். பின்னர் காலையில் மகாகணபதி சிறிய தேரோட்டமும், மாலையில் செங்கோட்டு வேலவர் சிறிய தேரோட்டமும் நடந்தது. இரவில் ஆதிகேசவ பெருமாள் திருக்கல்யாண வைபவம் நடந்தது.

15 நாட்கள் நடக்கும் இந்த விழாவின் 10-வது நாளான நேற்று முக்கிய நிகழ்வாக பெரிய தேரோட்டம் தொடங்கியது. இந்த தேரோட்டத்திற்கு முன்பாக ஆதிகேசவ பெருமாள் சிறிய திருத்தேரில் எழுந்தருளினார். இந்த சிறிய தேரோட்டம் காலை 8 மணியளவில் நடந்தது. பின்னர் காலை 10.30 மணிக்கு பெரிய தேரோட்டம் தொடங்கியது.

நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் தேர் நிலையில் இருந்து புறப்பட்டு, பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தது. பூக்கடை கார்னர் பகுதி வரை பக்தர்களால் தேர் இழுத்து வரப்பட்டு அங்கு நிலை நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து இன்றும், நாளையும் 2 நாட்கள் தேரோட்டம் நடைபெறும். நாளை மாலை பெரிய தேர் நிலைக்கு வந்து சேரும். அதன்பிறகு வண்டிக்கால் உற்சவம், நடராஜர் தரிசனம் போன்ற வழிபாடுகள் நடைபெறும். பின்னர் விழாவின் நிறைவாக கொடியிறக்கம் நடைபெறும்.

3 நாட்கள் நடைபெறும் இந்த கோவில் தேரோட்டத்தில், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுக்கின்றனர். தேர்த்திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு பல்வேறு அமைப்பினரும் அன்னதானம் வழங்கினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com