கவரைப்பேட்டை அருகே டிரைவரை தாக்கி லாரியை கடத்திய வழக்கில் 3 பேர் கைது

கவரைப்பேட்டை அருகே நள்ளிரவில் கத்தி முனையில் டிரைவரை தாக்கி இரும்பு பொருட்களுடன் கூடிய லாரியை கடத்திய கும்பலை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கவரைப்பேட்டை அருகே டிரைவரை தாக்கி லாரியை கடத்திய வழக்கில் 3 பேர் கைது
Published on

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டியை அடுத்த பில்லா குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர்(வயது 34). டிராக்டர் டிரைவர். இவர் நேற்று காலை கும்மிடிப்பூண்டி பைபாஸ்சாலை வழியே பாலகிருஷ்ணாபுரம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே திசையில் காரில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் சேகரை கத்தி முனையில் வழிமறித்து அவரிடம் இருந்த ரூ.2 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பி ஓட முயன்றனர். இதை பார்த்த பொதுமக்களில் சிலர் மேற்கண்ட நபர்களில் 3 பேரை மட்டும் அவர்கள் வந்த காருடன் மடக்கி பிடித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீஸ் விசாரணையில் அவர்கள், சோழவரம் பெரிய காலனியை சேர்ந்த கார்த்திக் (22), பிரசாந்த்(20) மற்றும் மீஞ்சூரை சேர்ந்த ஜெயசீலன்(23) என்பது தெரியவந்தது.

போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த 2-ந்தேதி கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் எல்லையில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை வழியாக ஆந்திர மாநிலம் நெல்லூர் நோக்கி ஜெய்லுப்தீன்(30) என்பவர் ஓட்டிச்சென்ற சொகுசு காரை மற்றொரு காரில் வந்து வழிமறித்து கத்தி முனையில் கடத்திச்சென்றதும், கடந்த 4-ந்தேதி கவரைப்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் மினிலாரி டிரைவர் மணிகண்டனை(38) உருட்டுக்கட்டையால் தாக்கி ரூ.5 லட்சம் மதிப்புள்ள இரும்பு பொருட்களுடன் லாரியை கடத்திச்சென்றதும் இவர்கள் தான் என்பது தெரியவந்தது.

இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் கேட்பாரற்று நிறத்தப்பட்டிருந்த மினி லாரியை மட்டும் சிப்காட் போலீசார் ஏற்கனவே மீட்டனர்.

தற்போது பிடிபட்ட 3 பேர் கொடுத்த தகவலின் அடிப்படையில் லாரியில் கடத்தப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள இரும்பு பொருட்களையும், பதிவு எண்ணை மாற்றி அவர்கள் பயன்படுத்தி வந்த கடத்தப்பட்ட சொகுசு காரையும் போலீசார் மீட்டனர்.

இவர்கள் வெங்கல், பொன்னேரி பகுதிகளில் கார் கடத்தலிலும், இரும்பு, அலுமினிய பொருட்கள் திருட்டு சம்பவங்களிலும், டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி வழிப்பறி செய்த சம்பவங்களிலும் தொடர்புடையவர்கள் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய அருண் மற்றும் அஜித்தை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com