சங்ககிரியில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது

சங்ககிரியில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சங்ககிரியில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது
Published on

சங்ககிரி:

ஈரோடு மாவட்டம் குமரன் குட்டை பகுதியை சேர்ந்தவர் மதன் (வயது 21), தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்தவர் வினோத் கண்ணன் (30). இவர்கள் 2 பேரும் மகளிர் சுய உதவிக்குழுவில் கலெக்சன் ஏஜெண்டுகளாக உள்ளனர். இவர்கள் சங்ககிரி அருகே உள்ள பனங்காடு பகுதிக்கு வந்தனர். அப்போது அங்கு வந்த 4 பேர் அவர்களை தாக்கினார்கள். பின்னர் 2 பேரிடம் இருந்த 2 பவுன் நகை, மோட்டார் சைக்கிள்கள், செல்போன்கள் ஆகியவற்றை பறித்து சென்றனர். இது குறித்து மதன், வினோத் கண்ணன் சங்ககிரி போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், சங்ககிரி காந்தி குப்பம் பகுதியை சேர்ந்த செல்வம் மகன் கவுதம் நிவாஸ் (18) மற்றும் சங்ககிரியை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் 3 பேர் என 4 பேர் சேர்ந்து மதன், வினோத் கண்ணன் ஆகியோரை தாக்கி, பணம், நகைகளை பறித்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் கவுதம் நிவாஸ் மற்றும் 2 சிறுவர்களை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு சிறுவனை தேடி வருகிறார்கள். கைதானவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் மது குடிக்க பணம் தேவைப்பட்டதால் அவர்கள் வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும் அவர்கள் கடந்த 20-ந் தேதி சங்ககிரி வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் திருடியது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com