கூட்டுறவு வங்கி மூலம் சுய உதவிக்குழுக்களுக்கு வட்டி இல்லா கடனுதவி - ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வழங்கினார்

மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு சுயதொழில் தொடங்குவதற்காக வட்டியில்லா கடனுதவி ரூ.12 லட்சத்தை ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. வழங்கினார்.
கூட்டுறவு வங்கி மூலம் சுய உதவிக்குழுக்களுக்கு வட்டி இல்லா கடனுதவி - ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வழங்கினார்
Published on

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றத்தை அடுத்த கூத்தியார்குண்டில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக வாழை, நெல், மல்லிகைப்பூ பயிரிட்டு விவசாயம் செய்வதற்கு என்று 200-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் உதவியாக ரூ.1 கோடியே 39 லட்சம் வழங்கப்பட்டது. இதற்கிடையில் கொரோனா சிறப்பு நகை கடனாக 90 நபர்களுக்கு ரூ.70 லட்சம் வழங்கப்பட்டது.

இந்தநிலையில் வேடர்புளியங்குளம் மகளிர் சுய உதவிக்குழுக்களின் கோரிக்கையை ஏற்று சிறு தொழில் செய்திட வட்டியில்லா கடனுதவி வழங்க வங்கி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி மதுரை பசுமலையில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சிறு தொழில் தொடங்க வட்டி இல்லா கடன் உதவி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு திருப்பரங்குன்றம் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளரும் கூத்தியார்குண்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவருமான நிலையூர் முருகன் தலைமை தாங்கினார். வங்கி செயலாளர் கதிர்வேல் வரவேற்றார். கூட்டுறவு விரிவாக்க அலுவலர் ஜெயப்பிரகாஷ், சரக மேற்பார்வையாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சிறு தொழில் தொடங்குவதற்காக ரூ.12 லட்சத்தை வட்டி இல்லா கடனுதவியாக வழங்கினார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. புறநகர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்டசெயலாளர் வக்கீல் ரமேஷ், துணைச்செயலாளர் முத்துக்குமார், திருப்பரங்குன்றம் பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், பகுதி துணை செயலாளர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com