மாவட்டம் முழுவதும் பரவலாக மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருச்சி மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மாவட்டம் முழுவதும் பரவலாக மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Published on

திருச்சி,

கஜா புயல் நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களை புரட்டி போட்டது. இந்த புயலின் தாக்கம் திருச்சி மாவட்டத்திலும் இருந்தது. லால்குடி, மண்ணச்சநல்லூர், அந்தநல்லூர், மணப்பாறை, மருங்காபுரி உள்ளிட்ட இடங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. மணப்பாறை, மருங்காபுரி பகுதியில் ஏராளமான மின்கம்பங்கள் சாய்ந்ததால், மின்சாரம் இன்றி மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். தற்போது சீரமைப்பு பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.

இந்த நிலையில் மீண்டும் 2 நாட்கள் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்தது. அதன்படி, நேற்று அதிகாலை முதலே திருச்சி மாவட்டம் முழுவதும் வானத்தில் கருமேகம் சூழ்ந்து பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. விட்டு விட்டு பெய்த மழையானது, காலை 8 மணி முதல் 11.30 மணி வரை இடைவிடாது பெய்து கொண்டே இருந்தது.

மழை காரணமாக காலையில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்ற மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டனர். முன்னதாக பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா? என்று தொலைக்காட்சிகளை பார்த்தபடியும், தாங்கள் படிக்கும் பள்ளிகளில் இருந்து செல்போனில் விடுமுறை அறிவிப்பு வருகிறதா? எனவும் ஆவலாக மாணவர்கள் பார்த்தவாறே இருந்தனர். மாவட்ட நிர்வாகம் தரப்பில் எவ்வித அறிவிப்பும் இல்லை என்றதும் வேறு வழியின்றி மாணவ-மாணவிகள் குடை மற்றும் மழை கோட்டுகளை எடுத்துக்கொண்டு பள்ளி, கல்லூரிக்கு புறப்பட்டு சென்றனர். சிலர் நனைந்து கொண்டும் சென்றனர்.

மேலும் இருசக்கர வாகனங்களில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைக்கு புறப்பட்டு செல்வோரும் மழையால் கடும் அவதியடைந்தனர். பகல் வேளையிலும் பஸ்கள், லாரி, கார், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை முகப்பு விளக்கை எரியவிட்டபடியே சென்றதை காணமுடிந்தது.

திருச்சி காந்தி மார்க்கெட், தென்னூர் உழவர்சந்தை, கே.கே.நகர் உழவர் சந்தை உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள உழவர்சந்தைகள் காலை வேளையில் சுறுசுறுப்பாக இயங்கும். நேற்று பெய்த மழை காரணமாக காய்கறி உள்ளிட்ட வியாபாரம் பாதிக்கப்பட்டது. மழை காரணமாக மார்க்கெட் மற்றும் உழவர் சந்தைகளுக்கு நுகர்வோர்களின் வருகை குறைவாகவே இருந்தது. வியாபாரிகளும் மழையில் நனைந்தபடி, வியாபாரம் செய்ய முடியாமல் தவித்தனர்.

தொடர் மழை காரணமாக சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் தண்ணீர் தேங்கி நின்றதால் பள்ளம் இருப்பது தெரியாமல் சிலர் அதில் வண்டியை இறக்கியதால் தடுமாறியபடி சென்றனர். திருச்சி மாநகர் மட்டுமின்றி, லால்குடி மணப்பாறை, புள்ளம்பாடி, துவாக்குடி, மலைக்கோட்டை, நந்தியார் அணை, சமயபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

நந்தியார் அணை-11.80, மலைக்கோட்டை-8, மணப்பாறை-7.20, துவாக்குடி-7, நவலூர் குட்டப்பட்டு-7, திருச்சி ஏர்போர்ட்-5.90, புள்ளம்பாடி-5.60, திருச்சி டவுன்-4.50, திருச்சி ஜங்ஷன்-3.20, சமயபுரம்-3, வாத்தலை அணைக்கட்டு-2.50, கல்லக்குடி-2.20, குப்பம்பட்டி-2, முசிறி-1, துறையூர்-1.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com