மனைவி மீது திராவகம் ஊற்றிய விவசாயி கைது

ஆத்தூரில் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவி மீது திராவகம் ஊற்றிய விவசாயி கைது செய்யப்பட்டார்.
மனைவி மீது திராவகம் ஊற்றிய விவசாயி கைது
Published on

ஆத்தூர்,

ஆத்தூர் அருகே கோபாலபுரம் ஊராண்டி வலசையை சேர்ந்தவர் ராஜாராம் (வயது 38), விவசாயி. இவரது மனைவி தமிழ்ச்செல்வி (28). இவர்களுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிறது. 2 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் தமிழ்ச்செல்வி நடத்தையின் மீது கணவர் ராஜாராமுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 11.1.2018-ந் தேதி இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த ராஜாராம், மரங்கள் பட்டுப்போக உபயோகப்படுத்தபடும் திராவகத்தை எடுத்து தமிழ்ச்செல்வியின் கால் மீது ஊற்றினார். இதில் படுகாயம் அடைந்த தமிழ்செல்வி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து தமிழ்ச்செல்வி கொடுத்த புகாரின்பேரில் மல்லியகரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் ராஜாராம் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com