தியாகராஜர் கோவில் கமலாலய குளத்தில் ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

ஆடி அமாவாசையையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவில் கமலாலய குளத்தில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
தியாகராஜர் கோவில் கமலாலய குளத்தில் ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்
Published on

திருவாரூர்,

ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை மற்றும் தை அமாவாசை போன்ற நாட்களில் புண்ணிய தீர்த்த தலங்களில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். மேலும் நாள் முழுவதும் விரதம் இருந்து முன்னோர்களுக்கு பிடித்த உணவு பதார்த்தங்களை படைத்து வணங்கி தானம் செய்வதால் முன்னோர்களின் ஆசி அவர்களது தலைமுறைகளை காப்பாற்றும் என்பது நம்பிக்கை.

அதன்படி நேற்று ஆடி அமாவாசையையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு சொந்தமான கமலாலய குளத்தில் அதிகாலை முதல் ஏராமானோர் புனித நீராடினர். பின்னர் அங்குள்ள படித்துறைகளில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். இதனால் காலை முதல் குளத்தின் கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதேபோல் திருவாரூர் அருகே உள்ள குருவிராமேஸ்வரத்திலும் ஏராளமானவர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

குடவாசல்

குடவாசல் அருகே உள்ள செதலபதி ஆதிவிநாயகர் கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com